இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் இரட்டை வேடம் போடுகின்றன என்று தே.மு.தி.க., கட்சி தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
பொன்னேரியில் வெள்ளிக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணத்தை நடத்திவைத்து அவர் மேற்கண்டவாறு பேசினார். விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைநகர் தில்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், கட்சிக்கு வெற்றி முக்கியம் அல்ல. தமிழர்களின் நலன் காக்கத்தான் எங்கள் கட்சி போட்டியிட்டது.
எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்திய பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். முள்ளிவாய்க்கால் போரின்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த ஜெயலலிதாவும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகின்றனர்” என்றார் அவர்.
நிகழ்ச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சி.எச்.சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.