எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான்- சென்னையில் சச்சின் டெண்டுல்கர் பேச்சு

எழுதுவதும் கிரிக்கெட் விளையாட்டும் ஒரே மாதிரியானதுதான் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

சென்னையில் ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் ‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து சச்சின் கூறியதாவது:

நான் சிறு வயதில் வெளியூரில் தங்கியிருந்த காலங்களில் எனது பெற்றோருக்கு கடிதம் எழுதுவேன். எனது மனைவி அஞ்சலிக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமான அனுபவம். எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான். இரண்டுக்கும் முறையான பயிற்சி தேவை, சரியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டிலும் போதிய பயிற்சி இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்க முடியும். கணினி பயன்படுத்துவதை விட எழுதும் போது நிறைய தகவல்கள் ஆழ் மனதில் பதியும் என்றார்.

ரைட்விஸ் என்ற ரெனால்ட்ஸ் திட்டத்தைப் பற்றி அந்நிறுவன விற்பனை பிரிவின் துணைப் பொது மேலாளர் பி.கார்த்திக் கூறுகையில், “தற்போது பலர் கணினியை பயன்படுத்தினாலும் கையெழுத்து அழகாக இருப்பது மிக முக்கியம். விருப்பமுள்ள பள்ளிகள் முன் வந்தால் அங்கு எங்கள் நிபுணர்கள் மூலம் கையெழுத்து பயிற்சி வகுப்புகளை நடத்துவோம். வாரம் இரு முறை இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE