கல்வி நிறுவனங்களில் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை தேவை: தங்கபாலு

மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் சாதி வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. அவரின் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்து, அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திப் பேசிய தங்கபாலு, ''ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மரணம் தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மத்திய பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்பதற்கு இல்லை.

முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலா இறப்பின் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் சாதி வன்கொடுமைகள் நடப்பது அம்பலமாகியுள்ளது. இது தலைநகர் டெல்லியிலேயே நடந்தது இன்னும் கொடுமை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறோம்.

மத்திய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, பாஜக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் விரைவில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE