திமுக பஞ்சாயத்து தலைவர் காரை தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் உள்ளிட்ட 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341, 324, கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் சரக் டி.ஐ.ஜி சஞ்ஜய் குமார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தும்பல், தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் கணேஷ் உள்ளிட்ட 6 பேர் வந்த கார் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த திமுக தொண்டர் முருகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அதிமுக எம்.பி. தம்பிதுரை கடந்த 24-ஆம் தேதியன்று திமுக தொண்டரை மிரட்டியதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் வருகிற 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அங்கு நேரடிப் போட்டியில் உள்ள அதிமுக- திமுக-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.