பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்த குழு அமைத்தது பாமக

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக குழு ஒன்றை அமைத்தது.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கில் இன்று (06.03.2014) காலை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கூட்டணி குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் மக்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஒரு குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார். இக்குழு விரைவில் பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சு நடத்தும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE