அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பும் ஆதரவும் இயல்பாக ஏற்படுவதுண்டு என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுவதைப் பற்றி கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டுமே இயல்பாக ஏற்படுவதுண்டு'என்றார்.
கடந்த பத்து நாட்களாக நடந்து வரும் பார்வையற்றவர்களின் போராட்டத்தைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 'தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்குச் சென்று, அங்கே சிகிச்சை பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்'என்றார்.
மேலும், 'தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. அதிலே முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.