இலங்கை கடற்படை காப்பாற்றிய 4 தமிழக மீனவர்களுக்கு சிறை

இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்திரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் பாண்டியன், தாமோதரன், கிஷோர் மற்றும் வீரமணி ஆகிய நான்கு பேர் சென்ற விசைப்படகு கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் திடிரென்று வீசிய பலத்தக் காற்றில் விசைப்படகில் மூழ்கத் தொடங்கியது. உடனே விசைப்படகில் இருந்த மீனவர்கள் நான்கு பேரும் பலகைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்களின் உதவியுடன் கடலில் தத்தளிக்கத் துவங்கினர்.

டிசம்பர் 5-ம் தேதி அதிகாலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் காப்பாற்றி முதலுதவி செய்தனர். பின்னர் மீனவர்களை நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெடுந்தீவு காவல்துறையினரிடம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள், பலத்த காற்றில் எங்கள் படகு மூழ்கி விட்டது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படையினர் தான் காப்பாற்றினர் என்று கூறியுள்ளனர். ஆனால், நெடுந்தீவு காவல்துறையினரோ நீங்கள் பிடிபட்டது இலங்கை பகுதி என்று கூறி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்கள் நான்கு பேரையும் விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி கஜநிதி பாலன், டிசம்பர் 19 ஆம் தேதி வரையிலும் காவலில் வைக்க உத்திரவிட்டார். இதனையடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து மீனவப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ''யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் நெடுந்தீவு காவல்துறையினர் மீனவர்கள் 4 பேர் பற்றி தகவல் அளித்தும் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தும் போதும் அலட்சியமாக இருந்ததினால் தான் மீனவர்கள் நால்வரும் தற்போது யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களுக்காக நேரில் ஆஜர் ஆகியிருந்தால் இந்நேரம் மீனவர்கள் தாயம் திரும்பியிருப்பார்கள்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE