ஒன்பது மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே நாட்டின் பிரதமராகும் தகுதி உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துள்ளது. குஜராத் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதாக மோடி கூறிவருகிறார். உண்மையில் பல லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள மாநிலம்தான் குஜராத்.
திரிபுரா, நாகலாந்து, மத்தியப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் வெற்றி பெறமுடியாது. இந்நிலையில் மோடி பிரதமராகி விடுவார் என பாஜக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
இரு மொழிகள் தெரிந்த ஒருவர் பிரதமர் ஆகலாம் என்றால், தற்போதைய தமிழக முதல்வருக்கு ஒன்பது மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரியும். எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவே பிரதமராவதற்கு முழுத் தகுதியையும் பெற்றவர் என்றார் தா.பாண்டியன்.