இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும் சமண சமயப் பெருமக்களுக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி யில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்: அகிம்சை, சத்தியம், புலனடக்கம் உள்ளிட்ட ஐந்து நல்லொழுக்கக் கொள்கைகளைப் போதித்தவர் மகாவீர். வெறுப்புணர்வு, தற்பெருமை, பேராசை ஆகியவற்றை விலக்கி சாந்தியும், சமாதானமும் கூடிய சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம். மகாவீர் பிறந்த இந்த நாளில் சமணப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீர் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் வர்த்தமான மகாவீர் போதித்தவாறு, பிறருக்கு மனத்தால்கூட தீங்கு செய்யாமலும், அகிம்சை நெறியோடும், அடக்கத்தோடும், பிறரை இகழாமலும், சினத்தைத் தவிர்த்தும், செருக்கில்லாமலும், பிறரிடம் குற்றம் காணாமலும், புறங்கூறாமலும் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்திட வேண்டும் என்ற அருளுரையை நாம் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் உலகம் மேன்மையுறும்.

அஇஅதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உலக இன்பம் உண்மையான இன்பமல்ல. அது நிலையில்லாதது. ஆன்மிக இன்பமும், அகிம்சை வாழ்வுமே போற்றுதலுக்கு உரியன என்பதை உலகுக்கு அறிவித்த மகான் மகாவீர். அவர் காட்டிய அன்பு வழியில், அறவழியில், அகிம்சை நெறியில் உலகம் பயணித்திட, அவர் அவதரித்த இத்திருநாளில் நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை அளிப்போம் என்று உறுதி மேற்கொள்வோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: அரச குடும்பத்தில் பிறந்த மகாவீர் அரசு வாழ்வை துறந்து, தமது செல்வத்தை மக்களுக்கு தானமாக வழங்கியவர். இம்சையை விட்டு அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்க்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அகிம்சை நெறியை உலகுக்கு உணர்த்தினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: எறும்புக்குகூட தீங்கு இழைக்கக்கூடாது என்ற மிக உயர்ந்த மனித உரிமையை போதித்தவர் மகாவீர். பேராசையே மனிதனின் துன்பங்களுக்கும், குற்றங்கள் செய்வதற்கும் காரணம் என்று போதித்த மகாவீரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் அவரின் போதனைகளை பின் பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது என்ற அரக்கனை அழிக்கவும் நாம் உறுதியேற்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மகாவீர் பிறந்த நாளை ஜைன சமய மக்கள் அனைவரும் இன்புடன், மகிழ்வுடன் கொண்டாடுவதுடன் அவரது புகழையும் பரப்ப வேண்டும். மகாவீர் சிந்தனை களையும், போதனைகளையும், சீர்திருத்தங்களையும் பின்பற்றுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE