சென்னையில் மாநகர பேருந்து ஓட்டுநர் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கியதாகக் கூறி சக ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு வெள்ளிக்கிழமை மாலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாகவி பாரதி நகரிலிருந்து அண்ணா சதுக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 2ஏ’ வழித்தட பேருந்து ஓட்டுநரான வாசுதேவனை மோட்டார் சைக்கிளில் வந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்களுக்கு வழிவிடவில்லை என்று கூறி சென்ட்ரல் அருகே தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பேருந்தை அவர்கள் தொடர்ந்து வந்தனர். இதற்கிடையே சக வழக்கறிஞர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் அந்த பேருந்து அண்ணாசதுக்கத்தை அடைந்ததும், டிரைவரை தாக்கி பேருந்தை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அண்ணாசதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து அவ்வழியே வந்த மற்ற பேருந்துகளின் ஓட்டுநர்களும் பேருந்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் பாரிமுனை முதல் அண்ணாசாலை வரை பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மறியலை கைவிட்டனர்.
பின்னர் போலீசார் ஒரு வழக்கறிஞரை கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.