பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து: கோவை இளைஞரிடம் போலீஸார் சோதனை- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்த கோவை இளைஞரிடம் போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இளைஞர் முகமது யூசுப். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இருவேறு மதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது.

குனியமுத்தூர் காவல்நிலைய போலீஸார் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், யுசுப்பின் வீட்டில் இருந்து பென் டிரைவ், பாஸ்புக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முகமது யூசுப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரம்ஜான் பண்டிகைக்காக தஞ்சாவூரில் அக்கா வீட்டுக்குச் சென்ற இளைஞர் முஜிபுர் ரஹ்மான், பெண் சிற்பங்களுடன் நாகரிகமற்ற முறையில் விதவிதமான போஸ்களில் இருப்பது போன்ற படங்களை எடுத்து சில வாசகங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டார். அவரது செயல் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE