மனநலம் பாதித்த சகோதரனை சரியாக கவனிக்காததால் ஆத்திரம்; மனைவியைக் கொலை செய்து கணவர் தற்கொலை

By டி.ஜி.ரகுபதி

கோவை வேடபட்டி அருகே மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் சாலை, வேடபட்டி அருகேயுள்ள நஞ்சப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர், பூ மார்க்கெட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.

மாரிமுத்துவின் முதல் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் மகளுடன் அவரைப் விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர், சுப்பாத்தாள் (60) என்பவரை, மாரிமுத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுப்பாத்தாள் அதே பகுதியில் வெற்றிலை, பாக்கு மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.

மாரிமுத்துவுக்கு கிருஷ்ணன் (60) என்ற தம்பி உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அதே பகுதியில் சுற்றித் திரிவார். தம்பி கிருஷ்ணனை, மாரிமுத்து தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுப்பாத்தாள், கிருஷ்ணனுக்கு சரிவர சாப்பாடு கொடுப்பதில்லை எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக மாரிமுத்து, சுப்பாத்தாள் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டில் மாரிமுத்து தூக்கில் தொங்கிய நிலையிலும், சுப்பாத்தாள் தலையில் ரத்தம் வழிந்த நிலையிலும் உயிரிழந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் விசாரணையில்,''தம்பிக்கு சரிவர சாப்பாடு கொடுக்காத காரணத்தாலும், பண விவகாரத்தாலும் மாரிமுத்துவுக்கும், சுப்பாத்தாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தம்பதியர் இடையே நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சுப்பாத்தாள் தூங்கச் சென்று விட்டார். ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து, வீட்டு சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து, சுப்பாத்தாளின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து விட்டார் .

பின்னர், மாரிமுத்து வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் இடத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது கயிறு அறுந்து அங்கிருந்த கல்லின் மீது விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வீட்டில் இருந்த சிமெண்ட் தொட்டியில் ஏறி விட்டத்தில் தூக்குப் போட்டு மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார்'' எனத் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE