பேருந்தில் பெண் போலீஸ் மடியில் அமர்ந்த போதை ஆசாமிக்கு தர்மஅடி விழுந்தது.
சென்னை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). செவ்வாய்கிழமை மாலையில் எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். காட்டுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடியே பேருந்தில் ஏறினார்.
ஆண்கள் அமரும் பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்த பின்னரும் நின்று கொண்டே பயணம் செய்தார்.
சிறிது நேரத்தில் பெண் போலீஸ்காரர் கமலா அமர்ந்து இருந்த இருக்கையின் அருகே வந்து நின்றவர், திடீரென அவரது மடியில் அமர்ந்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட, பேருந்து உடனே நிறுத்தப்பட்டது. மற்ற பயணிகள் அந்த ஆசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த ஆசாமியை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முழு போதையில் இருந்த அவரிடம் போலீஸார் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. சுமார் 3 மணி நேரம் கடந்த பின்னர் நடத்தப் பட்ட விசாரணையில் அவர், எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த முரளி என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.