பாஜகவின் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்; தீர்ப்பு மேல்முறையீடு செய்ய முடிவு: பரபரப்பாகும் புதுச்சேரி அரசியல் களம்

எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளது செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாக முதல்வரின் நாடாளுமன்ற செயலர் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்காமல் இருந்தது. மத்திய பாஜகவின் உத்தரவுப்படிதான் ஆளுநர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார். அப்பட்டியலில் பாஜகவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர், பாஜகவைச் சேர்ந்த தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தனர்..

இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது.

இந்நிலையில் ஜூலை 4-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக்கி மத்திய அரசின் பரிந்துரை புதுச்சேரி்க்கு வந்ததாக தெரிய வந்தது. இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் 4-ம் தேதி சந்தித்தனர். மத்திய அரசு எம்எல்ஏக்களாக நியமித்து அனுப்பிய கடிதத்தைப் பெற்றனர். அதில் மத்திய உள்துறை ஜூன் மாதம் 23-ம் தேதியே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அப்போதைய தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவை சந்தித்து, அவரிடமிருந்து மத்திய அரசு அனுப்பிய உத்தரவு நகலையும் பதவியேற்புக்கான கடிதத்தையும் பெற்றனர். அதைத்தொடர்ந்து அக்கடிதத்தை எடுத்து கொண்டு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சட்டப்பேரவையில் சந்தித்து வழங்கினர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் அப்போது கூறுகையில், "மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனம் பற்றி அரசிதழில் வெளியிடப்படும். அதையடுத்து சட்டப்பேரவை செயலருடன் ஆலோசனை நடக்கும். பின்னர், நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டார்.

ஆனால் 4-ம் தேதி இரவே ராஜ்நிவாஸுக்கு 3 எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் யாரும் ராஜ்நிவாஸுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கதவை மூடி பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தவுடன், அவர்கள் மூன்று பேரும் சட்டசபையில் இருக்கை, பேரவை வளாகத்தில் அலுவலகம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கான சலுகை வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு கடிதம் அனுப்பினார். இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 ஆகியவற்றிற்கு மாறாக 3 பேரும் உரிய தகுதிபெற்ற நபரால் நியமிக்கப்படவில்லை. நியமனமே செல்லாது என்ற சூழலில், துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக உங்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க முடியாது. எனவே எம்எல்ஏக்களின் சலுகைகள் கோரிய உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று கூறி 3 பேருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நியமன எம்எல்ஏக்களாக மூவரை நியமித்தது செல்லும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 26-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. அதில் நியமன எம்எல்ஏக்கள் இடம் பெறுவார்களா? சபாநாயகர் வைத்திலிங்கம் எவ்வித நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முழுமையாக படித்துதான் கருத்து தெரிவிக்க முடியும். அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அதன் பின்னர் நடவடிக்கை எடுப்போம்" என்று குறிப்பிட்டார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதுதொடர்பாக கூறுகையில், "நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும். விவாதத்தை மேம்படுத்தும். அரசின் பொறுப்பு அதிகரிக்கும். மக்களுக்கு களப்பணியாற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக இவ்வழக்கினை தொடர்ந்த எம்எல்ஏ லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதற்காக டெல்லி செல்ல உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்