திருச்சியில் புதன்கிழமை பட்டப்பகலில் காரில் வந்தவர்களை மடக்கி மிளகாய்பொடியை தூவி ரூ.50 லட்சம் ரொக்கத்தை இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருச்சி திருவெறும்பூர் எறும்பீசுவரர் நகரைச் சேர்ந்த தயாலால் மகன் விஜேஷ்(34). இவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 4 மர அறுவை மில்கள் உள்ளன. மர மொத்த வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு தென்னூரில் உள்ள ஒரு வணிகரிடம் இருந்து வர வேண்டிய ரூ.50 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு. புதன்கிழமை மதியம் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த டேவிட்(28), ஓட்டுநர் மலைக்கோவிலைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்(43) ஆகியோர் காரில் வந்துகொண்டிருந்தனர்.
கார் காட்டூர் பாலாஜி நகர் அருகே வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரை வழிமறித்து நிறுத்தி, காரில் இருந்த இருவர் மீதும் மிளகாய்பொடியைத் தூவிவிட்டு காரில் காகிதத்தில் சுற்றி வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து கார் ஓட்டுநர் சிவசுப்பிரமணியன், டேவிட் நிறுவன உரிமையாளர் விஜேஷுக்கு தகவல் தெரிவித்தனர்.விஜேஷ் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.