கோவையில் பெற்றோர் கண் முன் மகன் கொல்லப்பட்ட வழக்கு: 2 பேர் கைது

கோவையில் பெற்றோர் கண் முன் மகன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.   

போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ(28). இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது இவரது வீட்டுக்கு வந்த சில இளைஞர்கள், ஜான் பிரிட்டோவுடன் தகராறு செய்தனர். பின்னர், ஜான் பிரிட்டோவை அவரது பெற்றோர் முன்னிலையில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். 

போலீஸாரின் விசாரணையில், "ஜான் பிரிட்டோ நண்பர்களுடன் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டருகே வந்த போது, போத்தனூர் மேட்டுத்தோட்டத்தை சேர்ந்த காட்வின் ராஜா(28) என்பவர் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான் பிரிட்டோ தரப்பினர், காட்வின் ராஜாவைக் கத்தியால் குத்தியுள்ளனர். பதிலுக்கு அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோவைக் கத்தியால் குத்தினர்", என தெரியவந்தது. 

இதுகுறித்து போத்தனூர் போலீஸார் கூறும்போது, "கத்தியால் குத்தப்பட்ட ஜான் பிரிட்டோ நேற்று முன்தினம் இரவு வீட்டருகே உயிரிழந்து விட்டார். கத்திக்குத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்வின் ராஜா, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜான்பிரிட்டோ கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மில்டன் ராபின் (28), குட்டி என்கிற நித்யகுமார் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE