வழக்குக்குப் பயந்து மாற்றுப் பாதையில் சென்ற திமுக வேட்பாளர்

மதுரை மக்களவைத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் வ.வேலுச்சாமி, வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே கே.கே.நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் புறப்படுவதாகவும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருமாறும் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்து நீதிமன்றம், ராஜா முத்தையா மன்றம், காந்தி மியூசியம் வழியாக அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழிநெடுகிலும் வீடியோ கேமராவுடன் அதைக் கண்காணித்தனர்.

இதனால் வழக்குக்குப் பயந்து, கட்சியினர் யாரும் வர வேண்டாம் என்று அறிவித்த தி.மு.க.வினர், தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெறும் 3 காரில் ஆட்சியர் அலுவலகம் புறப்பட்டனர். அதுவும் முன்னறிவிப்பின்றி, வக்பு வாரிய கல்லூரி, சட்டக் கல்லூரி, காந்தி மியூசியம் வழியாக மாற்றுப் பாதையில் அவர்கள் சென்றனர். இதனால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE