பொன்பரப்பி வன்முறையில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர். ஒரு தெருவில் ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் பொன்பரப்பி கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி உத்தரவின்பேரில், சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், 48 வீடுகள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு, வருவாய் ஆய்வாளர் கஸ்தூரி, விஏஓக்கள் இளையராஜா, பரமேஸ்வரன்(கூடுதல் பொறுப்பு) ஆகியோர் சேதமடைந்த அனைத்து வீடுகளிலும் உள்ள உடைந்த ஓடுகளுக்குப் பதிலாக புதிய ஓடுகள் பொருத்தும் பணி மற்றும் மரச்சட்டங்கள் மாற்றும் பணியை நேற்று தொடங்கினர். இப்பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொன்பரப்பி கிராமத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அரியலூர் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீனிவாசன் தலைமையில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பொன்பரப்பி பகுதியில் அமைதியான சூழல் நிலவுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE