அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். இடங்கள் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள பட்டதாரிகள் www.onlinetn.com என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்தபடி, ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து அத்துடன் கல்விச் சான்றிதழ் நகல்களையும் (சுய சான்றொப்பம் அவசியம்), விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட்டையும் 12-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு பதிவு தபாலிலோ அல்லது விரைவு தபாலிலோ அல்லது கூரியர் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பான முழு விவரங்களையும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnteu.in) பி.எட். பட்டதாரிகள் தெரிந்து கொள்ளலாம்.