போராட்டத்தின் போது பொது சொத்து சேதம் செய்யப்பட்டதற் கான இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு பா.ம.க.வினருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அப்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி எங்கள் கட்சித் தொண்டர்கள் பலரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனை எதிர்த்து 30.4.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கட்சி நிறுவனர் ராமதாஸ், நான் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டோம்.
இந்நிலையில் எங்கள் கட்சி போராட்டத்தின்போது மயிலம் - புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு பாலம் சேதமடைந்ததாகவும், சேதத்தின் மதிப்பு ரூ.18 லட்சம் எனவும், அதற்கான இழப்பீட்டை தர வேண்டும் எனவும் கூறி எனக்கு தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாலம் சேதம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். எனினும் வழக்கில் யாருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படவில்லை. பாலம் சேதத் துக்கு எங்கள் கட்சித் தொண்டர் கள்தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாலத்தை சேதப்படுத்தியதாக யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
இந்நிலையில் எவ்வித அடிப் படையும் இன்றி பாலம் சேதம் அடைந்தததற்கான இழப்பீட்டை செலுத்தும்படி எங்கள் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது சரியல்ல. ஆகவே, இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு தடை விதிப்பதோடு, நோட்டீஸை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது, பா.ம.க.வினருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தொடர்பான மேல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.