ஸ்ரீரங்கம் கோயில் நகரைப் பாரம்பரியச் சின்னங்களில் சேர்ப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும். தமிழகத்தில் ஓராண்டுக்குள் அனைத்து அரசுப் பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்படும்’’ என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்த பிறகு நிருபர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி முதல்வருடன் விவாதித்தேன். இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.
தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வரும் மழைநீர் சேகரிப்பு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவைப் பற்றியும் விவாதித்தோம். இதர மாநிலங்களைவிட குடிநீர் வரி வசூலிப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தில் பெண்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனினும் ஓராண்டுக்குள் அனைத்து அரசுப் பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு உதவும். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும். இத்திட் டத்துக்குத் தனியாரிடம் இருந்து நிதி வசூலிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு எடுத்துரைத்தேன்.
சென்னை திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிச்சயம் ஒப்புதல் தருவோம். தமிழகத்தால் பரிந்துரைக் கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிலைமையைப் பொறுத்து நிச்சயம் உதவி செய்யப்படும்.
காஞ்சி, வேளாங்கண்ணி போல் ரங்கத்தையும் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் சேர்க்க முதல்வர் கோரிக்கை விடுத்தார். அது நிச்சயம் பரிசீலிக்கப்படும்.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம், வரும் 12-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் பங்கேற்க அமைச்சரையும் உயரதிகாரி ஒருவரையும் அனுப்ப முதல்வர் ஒப்புக்கொண்டார்.
தமிழகத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படாது. அவர்கள் (தமிழகம்) எங்கள் கூட்டணியில் இல்லையெனினும் எங்கள் நட்பு மாநிலமாகும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிச்சயம் ஒப்புதல் தருவோம். தமிழகத்தால் பரிந்துரைக் கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிலைமையைப் பொறுத்து நிச்சயம் உதவி செய்யப்படும்.