துணை நடிகர் ரொனால்டு கொலையில் தொடர்புடைய நடிகை ஸ்ருதி சந்திரலேகாவை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அடுத்த பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). தென்காசி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பின்னர் அந்த தொழிலை நண்பரிடம் கொடுத்துவிட்டு, ஆன்–லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கி தொழில் செய்து வந்தார். சினிமா எடுப்பவர்களுக்கு நிதியுதவியும் செய்துள்ளார். காகிதபுரம், கொக்கிரகுளம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா என்பவருடன் ரொனால்டுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தனது கணவர் ரொனால்டை காணவில்லை என்று மதுரவாயல் போலீஸில் ஸ்ருதி புகார் தெரிவித்தார். அதன் பிறகு ஸ்ருதி தலைமறைவாகிவிட்டார்.
ரொனால்டு கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் பாளையங்கோட்டையில் புதைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி, ரபீக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஸ்ருதி பெங்களூரில் தலைமறைவாக இருந்ததால், வழக்கும் கிடப்பில் போடப்பட்டது.
ரகசியத் தகவலையடுத்து மதுரவாயல் போலீஸார் பெங்களூரில் முகாமிட்டு, ஸ்ருதியை கைது செய்தனர். சென்னைக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்ட ஸ்ருதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான உமாசந்திரனை பிடிக்கவும், அவரிடம் உள்ள ரூ.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்யவும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொலை குறித்து போலீஸார் கூறியதாவது:
ரொனால்டும், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த உமாசந்திரனும் நண்பர்கள். ஆன்–லைன் தொழிலில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பின் ரொனால்டு சினிமாவில் கவனம் செலுத்தி வந்துள்ளார். நடிகை ஸ்ருதியுடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர். சிறிது காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையில் ரொனால்டின் நண்பர் உமாசந்திரனுடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஸ்ருதியும், உமாசந்திரனும் சேர்ந்து பொது எதிரியான ரொனால்டை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அதன்படி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து ரொனால்டை கொலை செய்தனர். அவரிடம் இருந்த ரூ.75 லட்சம் பணம், நகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு உமாசந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியுடன் பாளையங்கோட்டை ஆசீர்வாத நகரில் புதைத்துள்ளனர். ரொனால்டு கொலை தொடர்பாக, அவரது சகோதரர் ஜஸ்டீன் சில தகவல்களை பாளையங்கோட்டை போலீஸில் தெரிவித்தார். அதன்பிறகே, இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.