வரும் 18-ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்

வரும் 18 -ம் தேதி தெற்கு வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "கஜா புயல் இன்று காலை 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவியுள்ளது. இதன்காரணமாக அடுத்து வரும் 24 மணிநேரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

2-3 மணிநேரத்தில் புயல் முழுமையாக தமிழகத்தை விட்டு வெளியேறும். அரபிக்கடலில் ஒருநாளில் அப்புயல் செல்லும்.தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 18 -ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

இது, 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கப்பகுதியில் நிலவக்கூடும். மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்குச் செல்லலாம். வரும் 18 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் 19, 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கடந்த 1 முதல் 16 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 22 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. இது இயல்பை விட 23 சதவீதம் குறைவு. நேற்று வரை 29 சதவீதமாக இருந்த நிலை தற்போது 23 சதவீதமாக குறைந்துள்ளது. 6% அளவுக்கு மழை நமக்கு கிடைத்துள்ளது" என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE