குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறு கோரி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி பேரவை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கம் ஆகியவை மனு அளித்துள்ளன.
பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி பேரவையின் தலைவர் செந்தில் மற்றும் தமிழ்நாடு நாடார்கள் சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் ஆகியோர் இது தொடர்பாக அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்ரோவின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க சிலர் முயற்சிப்பதாக அறிகிறோம்.
ஏற்கெனவே அங்கு இரு ஏவுதளங்கள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது ஏவுதளத்தையும் அங்கு அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல. மேலும், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் அறிவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக ஏற்படும் நன்மைகள் குறித்து விஞ்ஞானிகள் விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர். எனவே, மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்கும்படி பிரதமரிடம் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.