தமிழக சட்டப்பேரவையில் திமுக என்றைக்குமே பயந்தது இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்னும் தலைப்பில் திமுக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இதில் சென்னை திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை பேச அனுமதிக்கப்படாத போது அவர்கள் வெளிநடப்பு செய்வது மரபாக உள்ளது. மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஆளுங்கட்சியினர் பதிலளிக் காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அப்போது அமைச்சர் ஒருவர், ‘ஓடுகாலிகள் ஓடுகிறார்கள்’ என்று தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இதுதான் இன்றைக்கு தமிழக சட்டசபையில் இருக்கக்கூடிய நிலையாகும்.
தமிழக சட்டசபையில் ஜனநாய கம் படுகுழியில் தள்ளப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் என்றைக்கும் திமுக பயந்தது இல்லை. ஆட்சி யில் இருப்பவர்களை கேள்வி கேட்க வேண்டுமென்றால் அது சட்டசபையில் மட்டும் தான் முடியும். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.