சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், திடீரென உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன் என்றும், அதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், இது எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்விசாரணைக்கு தடை விதித்து வழக்கு விசாரணையில் இருந்து விலகினர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.
அவமானப்படுத்தும் செயல்: இதனிடையே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கட்டும் என தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜ சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “இந்த வழக்கில் திடீரென உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்? அதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம். இது எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இந்த வழக்கு அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் தொடரப்பட்டுள்ளதா அல்லது பொதுமக்கள் நலன் சார்ந்ததா” என அதிருப்தி தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.
பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “டாஸ்மாக்கில் தவறு நடந்துள்ளது என்பதை நம்புவதற்கான காரணங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அதுபோல எதுவும் இல்லை, சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளைத்தான் துன்புறுத்தியுள்ளனர். விதிகளை பின்பற்றவில்லை எனில் நீதிமன்றம் தலையிடலாம்” என வாதிட்டார்.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், “இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவு தற்போதும் தொடர்கிறதா” என்றார். அதற்கு நீதிபதிகள், அதுபோன்ற எந்த உத்தரவையும் இந்த அமர்வு பிறப்பிக்கவில்லை என்றும், எழுத்துப்பூர்வமான உத்தரவை மட்டுமே நீதிமன்றம் பின்பற்றும் என்றும் தெரிவித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என அமலாக்கத் துறை ஏற்கெனவே உறுதியளித்தது. அதன்காரணமாகவே அந்த அமர்வு, வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தது. தற்போது அமலாக்கத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடாது” என்றார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago