சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து” என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, “எதிர்க்கட்சி” என பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதற்றத்தில் இருக்கிறேன் நான். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்று சமாளித்து ரியாக்ட் செய்தார்.
தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.8) காலை தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள்: > சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.
> பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.
> அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.
> குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.
> ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
> ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.
> ஆளுநர் மாநிலத்தின் முறையான தலைவர் என்றும் அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்துகிறார் என்றும் கடந்த கால அரசியலமைப்பு அமர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார்.
அந்த நிலையில், அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்தத், தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திமுகவின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர்கள் கருத்து: இதையடுத்து உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (விசிக), தி.சதன் திருமலைகுமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக ), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர்
பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டியும் பேசினர். தொடர்ந்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, “அகில இந்திய அரசியலுக்கும், அரசியவாதிகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், முதல்வர் தீர்ப்பை பெற்று தந்துள்ளார். இது யாராலும் மறுக்க முடியாத தீர்ப்பாகும்.
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 சட்டமுன்வடிவுகளுக்கு, ஆளுநர் அன்றைய தினமே ஒப்புதல் தந்திருக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் தந்துள்ளது. இது முதல்வரின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. தமிழக அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றிய அனுப்பிய 10 சட்டமுன்வடிவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அடித்து சொல்லியுள்ளது.
ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை. மாநில அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அது மக்கள் நலன்களை பாதிக்கும். உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல்சாசனத்தின் முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்றார்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து, இந்தப் பேரவையில் பேசும்போது, பின் நாளில் வரலாற்றில் யாரெல்லாம் பாராட்டினார்கள். யாரெல்லாம் பாராட்டாமல் இருந்தார்கள் என்று வருமே. அதனால், அனைவரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். முதல்வரை இளம் வயதில் இருந்து தெரியும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மடியில் நான் வளர்ந்தவன். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுவரை எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சிக்கு அடிகோலினார். அவரது மகன் இன்றைக்கு ஆளுநர் தேவையில்லை என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆளுநர்கள் மன்னர்கள் போல் நடந்து கொள்கின்றனர். இங்குள்ள ஆளுநரை பார்த்து தான் மற்ற ஆளுநர்களுக்கு ஆணவம் வந்தது” என்றார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசும்போது, “அமைச்சரவை எழுதி கொடுப்பதை மட்டும் தான் சட்டப்பேரவையில் வாசிக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்பதை, இந்த சட்டப்பேரவை தான், இந்த முதல்வர் தான் இந்தியாவுக்கே வழிக்காட்டினார். அதேபோல் தான் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நீதியை முதல்வர் பெற்று தந்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் உங்கள் (அதிமுக) ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் கிடந்தது. மீண்டும் இரண்டாவது முறையாக இதே சட்டப்பேரவையில் அந்த பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்று மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியது இன்றைய முதல்வர் தான். அதற்குக்கூட நன்றி சொல்ல தயக்கம் இருப்பது தான் வேதனையான விஷயம்” என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல், எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சி செய்கின்ற பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, மற்ற அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பாராட்டியும், வாழ்த்தியும் பேசி அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.
இந்நேரத்தில், நமது அரசமைப்பு சட்டத்தில் மாநில சட்டப்பேரவைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடிய உரிமைகளை நிலைநாட்டிய உச்ச நீதிமன்றத்துக்கு , தமிழக அரசு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரவை முன்னவர் துரைமுருகன் உருக்கத்தோடும், நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதி மடியிலே நான் வளர்ந்தவன் என்று அவர் சொன்னார். நீங்கள் சொன்னபோது, நான் எண்ணியது, உங்கள் மடியிலே நான் வளர்ந்தவன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
“பதற்றத்தில் இருக்கிறேன்..” - முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பினை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை, அனைத்து கட்சி, மன்னிக்கவும்... ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து...” என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, “எதிர்க்கட்சி” என பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதற்றத்தில் இருக்கிறேன் நான். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்று சமாளித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “கொள்கையிலே நிச்சயமாக, உறுதியாக இருப்பேன், இருப்பேன், இருப்பேன் என்கிற உறுதியோடு, இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையை தட்டி நம்முடைய நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன்” என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் மேசையை தட்டி நன்றியை தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago