சென்னை: “சபாநாயகர் அப்பாவு மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் அதிமுகவினர் மனச்சாட்சி உறுத்தும். இது பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது” என்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பேரவைத் தலைவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று (மார்ச் 17) தமிழக சட்டப் பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னதாக, இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது: “மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதைப் பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை. கடந்த 2017-ம் ஆண்டு, இதேபோன்ற ஒரு தீர்மானம் வந்தது.
2017-ம் ஆண்டு என்னால் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எண்ணி நான் அன்றைக்கு வருந்தினேன் என்று என் உரையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் இந்தத் தீர்மானம் இன்றைக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் கடந்த பேரவைகளின் செயல்பாடுகள், அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்துகொண்ட முறைகளையும் பற்றி இங்கேயுள்ள நம்முடைய பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், ஏன், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவருக்கும் கூட நன்றாகத் தெரியும். நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், அவற்றோடு தற்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு-வின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து, நம்முடைய பேரவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தைக் கருதுகிறேன். 2006 - 2011 காலக்கட்டத்தில் நம்முடைய பேரவைத் தலைவரும், இந்த அவையில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது நான் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக அப்போது பணியாற்றினேன். அப்போதிலிருந்தே எனக்கு அவரை நன்றாகத் தெரியும்.
» தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஏற்பாடு செய்க: ரயில்வே அமைச்சருக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
» ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
பேரவைத் தலைவர், ஜனநாயகக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத அளவில், தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர். அவரது நடுநிலையோடு நிற்கும் நேர்மைத் திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும் என்னைக் கவர்ந்த காரணத்தால்தான் அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நம்முடைய அப்பாவு. கனிவானவர், ஆனால் அதேநேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். இவை இல்லாவிட்டால் அவையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த இயலாது.
இந்த அவையில், என்னுடைய தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ, பேரவை நடவடிக்கைகளில் இல்லாத வகையில் தான் பேரவைத் தலைவர் அப்பாவு நடந்து வருகிறார். கடந்த காலங்களில் நடைபெற்றதுபோல் அல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து செயலாற்றி வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவர் நம்முடைய பேரவைத் தலைவர் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
பேரவைத் தலைவருக்கு அருகில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்போடு பேசிச் செல்வதை இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்த காட்சி தான். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்த்துவதையும் உங்களில் பலரும் பார்த்திருக்கலாம்.
எங்களைப் பொறுத்தவரையிலும், விவாதங்களில் விருப்பு, வெறுப்பின்றி நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். 23.3.2017 அன்று அன்றைக்கு இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபுகளிலிருந்து விலகல்கள், என்னுடைய உரையில் அன்றைக்குச் சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதனை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும்.
அது மாதிரியா இன்றைக்கு நடக்கிறது? என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். நான் அன்றைக்கு உள்ளபடியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையின் வெளிப்பாடாகத்தான் அது மீண்டும் தொடரக் கூடாது என்று முடிவெடுத்தேன். இந்த அவையில் அதுமாதிரி நிகழ்வுகள், விதிமீறல், ஜனநாயகத்தை புறந்துள்ளும் மரபு மீறல்கள், எதுவும் நிகழக்கூடாது என்பதில் முதல்வராக பொறுப்பேற்றவுடன் நான் காட்டிய உறுதி, அப்பாவு-விடம் பொறுப்பை ஒப்படைக்கச் செய்தது.
அவரும் முழுமையாக அதனை உணர்ந்து, பேரவைத் தலைவராக தன்னுடைய பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து செயலாற்றுகிறார்.
இந்தத் தீர்மானம் மு.அப்பாவு-வின் மீது சில அதிமுக உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி அவர்கள் வைத்த வாதங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் உள்ள காரணத்தால், அதனை மறுத்து, விளக்கத்தை எடுத்து வைத்து பேரவைத் தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடப்பாடு, கடமை, பொறுப்பு முதல்வருக்கும் உள்ளது, இங்கே உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது.
அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளாக அன்றைக்குப் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள், 'அருகதை', 'தகுதி', 'என்ன யோக்கியதை இருக்கிறது' என்று திமுக உறுப்பினர்களைப் பார்த்து அன்றைக்குப் பேசப்பட்ட அந்த வார்த்தைகள், இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பெற்றுள்ளன. அன்றைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் அவைக்குறிப்பில் இடம் பெறும். திமுக உறுப்பினர்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை. இன்றைக்கு பேரவைத் தலைவர் அப்படியா நடக்கிறார்? இல்லை.
நம்முடைய பேரவைத் தலைவர் அதிமுக உறுப்பினர்கள் பேசுகிற இதுபோன்ற ஒன்றிரெண்டு வார்த்தைகளைக் கூட விட்டுவிடுகிறார். ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்கிறார் என அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லும்போது, அதைக்கேட்டு உள்ளபடியே எனது மனம் மகிழ்ச்சி அடைந்தது. ஏனென்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் தர வேண்டும், அவர்கள் இந்த அரசின் செயல்பாட்டினை செம்மைப்படுத்துபவர்களாக உள்ளவர்கள் என்பதில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழி நடக்கும் திராவிட மாடல் அரசுக்கு அந்த எண்ணம் உண்டு.
பல நேரங்களில் கடந்த காலங்களில் நான் பெற்ற கசப்பான உணர்வு என் நினைவுக்கு வரும். இங்கே, அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தால், தொடர்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால் அவர்களை அமைதிப்படுத்தி, அமர வைக்கத்தான் பேரவைத் தலைவர் முயல்வாரே தவிர முந்தைய பேரவைகளில் நாங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதைப் போல, என்றும் வெளியேற்றம் செய்ய பேரவைத் தலைவர் நினைத்ததில்லை.
கூட்டணியில் உள்ள எங்கள் கட்சி உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் பங்குபெற, முன்பு அளிக்கப்பட்டதுபோல தனியே வாய்ப்பு அளிக்காமல், எங்கள் கணக்கிலேயே பேரவைத் தலைவர் சேர்த்துவிடுகிறார். கேட்டால், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள் என்ற காரணத்தால் என்பார். அது மாதிரியா முன்னர் நடந்தது? ஒன்றிரெண்டு விஷயங்களை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கடந்த ஜன.10-ம் தேதி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார். 1.40 மணிக்குத் தொடங்கி 4.32 மணிக்குத் தான் முடித்தார். 2 மணிநேரம் 52 நிமிடம் பேசியுள்ளார். அமைச்சர்களின் குறுக்கீடுகள் 1 மணி நேரம். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மட்டும் பேசியது 1 மணிநேரம் 51 நிமிடம்.இங்கே எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் உரையாற்றுகையில் அமைச்சர்கள் விளக்கம் அளிக்க எழுந்தால், உரையை முடித்த பிறகு விளக்கம் அளிக்கலாம் என அமர வைத்துள்ளார்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முன்வரிசைத் தலைவர்கள் எழுந்தால் உடன் அனுமதி அளித்திடுவார். நான் குறையாகச் சொல்லவில்லை, பெருமையாகவே சொல்கிறேன். அமைச்சர்கள் குறுக்கீடும் உறுப்பினர்கள் கணக்கில் ஏற்கெனவே கடந்த காலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுப்பினர் பேசுகிற நேரத்தை மட்டும் கணக்கிட்டு, இங்கே உள்ள ஸ்கீரினிலேயே காண்பிக்கிறார்கள்.
அனைத்து வகைகளிலும் எங்களை லாக் செய்கிறார் என எங்கள் கட்சி உறுப்பினர்கள் சொன்னாலும், சுதந்திரக் காற்றை இந்தப் பேரவை தற்போது சுவாசிக்கிற காரணத்தால், பேரவைத் தலைவர் செயல்பாட்டினை எண்ணி மகிழ்ச்சியுற்றுள்ளேன். பேரவைத் தலைவராக மட்டுமல்ல, பேரவை கடைப்பிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவராக அப்பாவு செயல்பட்டுள்ளார் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.
பல நாட்களில் அதிமுக உறுப்பினர்களை பேச அனுமதித்துவிட்டு, திமுக உறுப்பினர்கள் பேச பெயர் பட்டியலில் இடம் பெற்றும், இன்னொரு நாள் பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார். பேரவைத் தலைவரின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக பாராட்ட முடியாவிட்டாலும், மனதுக்குள் பாராட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.
இந்த அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா? உள்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம்.
ஆனால், இப்படி ஒருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் உங்கள் மனச்சாட்சி உறுத்தும். இது பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அதன் முழு விவரம்: சபாநாயகர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago