“மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவெடுப்பார்” - கே.பி.முனுசாமி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து, பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி எம்எல்ஏ-வான அசோக்குமார், ஊத்தங்கரை எம்எல்ஏ-வான தமிழ்செல்வம் ஆகியோர் இன்று (அக்.22) பார்வையிட்டனர்.

அப்போது கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழையால் கிருஷ்ணகிரி மாவட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். திருமாவளவன், வேல்முருகன் ஆகிய இருவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள். அவர்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் இருவரும் கட்சிக்காக மட்டும் குரல் கொடுக்காமல், அந்த சமுதாயத்துக்காக மேலும் குரல் கொடுக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.

அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்கிற கருத்தை ஊடகங்களும், சில அரசியல் விமர்சகர்கள் சுயநலம் கருதியும் கூறி வருகின்றனர். அதிமுகவுக்கு இடையூறு செய்து, கட்சியை உடைக்க வேண்டும் என நீதிமன்றம், காவல் நிலையம் சென்றவர்கள், கழகத்துக்கு களங்கம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றி இருக்கிறோம். தவறு இழைத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக சட்ட விதிகளில் இல்லை.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் தவறு செய்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அதனை பொதுச் செயலாளர் முடிவெடுத்து விருப்பப்பட்டால் சேர்க்கலாம். அப்படி மீண்டும் அவர்கள் தவறு செய்வார்கள் என தோன்றினால் சேர்க்காமல் போகலாம். அது பொதுச்செயலாளரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

தற்போது யார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து கட்சியில் சேர முன் வருகிறார்கள் என அவருடைய பெயரைக் கூறினால் நாங்கள் பரிசீலிக்கிறோம். ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் அறிவும், முயற்சியும் அனுபவமும் இல்லாதவர்கள் அல்ல. அவர்கள் சுயநலத்துடன் கருத்து சொல்லி வருகிறார்கள். அவர்கள் கட்சியின் நலன் கருதி கருத்துக்களைக் கூறினால், அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் நாங்கள் என்ன கூற வேண்டும் என முடிவு செய்வோம்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி, உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு டாடா, டெஸ்லா, ஓலா, மைலான் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தார். முதல்வர் ஸ்டாலின் முதல்வரான 4 ஆண்டு காலத்தில், அவரும் உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார்; வெளிநாடுகளுக்குச் சென்றார். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எந்தத் தொழிற்சாலையை கொண்டு வந்துள்ளார்?

காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்பு பழனிசாமி ஆட்சியில் தான் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில், வண்டல் மண் முழுவதையும் பிளாட் போட்டு விற்பவர்களுக்கு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக மட்டும் அரசாங்க பணத்தை பயன்படுத்தும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார், என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்