“பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து காவல் துறையினருக்கு  வழிகாட்டுதல் வழங்கிடுக” - தமிழக பாஜக 

By செய்திப்பிரிவு

சென்னை: “காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். காவல்துறையினர் அவசியம் இல்லாமல் அத்துமீறி வீடியோ எடுக்கும்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மோதல் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறையினர் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அத்துமீறல்களை, பாதிப்புகளை தான் வீடியோ எடுக்க வேண்டும்,” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவலர்கள் மக்களின் தோழர்களாக செயல்பட தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு, தமிழக அரசு மனிதவள மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும். சமீபத்தில் காவலர்களுக்கும் மது போதையில் இருந்த இருவருக்கும் நடந்த மோதல், காவல்துறையின் கண்ணியத்தை பெருமையை தியாகத்தை சிதைக்கும் வகையில் இருந்தது. இதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் காவலர்களுக்கு மக்கள் கூடும் பொது இடங்களில், இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட, பொதுமக்களை மிரட்டும் போக்குடன் செயல்படுவதற்கு தமிழக காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசாங்கம் விற்கும் மதுவை குடித்து ஒருவர் போதையில் இருக்கிறார் என்பதற்காக ஒருவரை கண்ணிய குறைவாக நடத்தக் கூடாது. சட்டத்தை மீறாத மது பிரியரை மது குடித்திருக்கிறார் என்பதற்காக அவமானப்படுத்தக் கூடாது.

இதுபோன்ற விஷயங்களில் பிரச்சனையின் ஆரம்பம் காவல்துறையின் தவறான அணுகுமுறை தான் என்பதை திறந்த மனதுடன் காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து காவலர்களுக்கும் காவல் ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழே உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய முறையில் திருவிழாக்கள் பொதுமக்கள் கூடும் கடற்கரை, பூங்கா மால்கள் உள்ளிட்ட இடங்கள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களிடம் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் அன்புடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வதற்கு உரிய திட்டத்தை தீட்ட வேண்டும்.

அதேபோன்று மது போதையில் பண திமிரும், அதிகார திமிரும், அரசியல் தலைவர்களின் செல்வாக்கும் இருப்பதால் காவலர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் அவமானப்படுத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு தகுந்த தண்டனையை சட்டப்படி நீதிமன்றம் மூலமாக காவல்துறையினர் பெற்றுத் தர வேண்டும்.

ஒரு கடை நிலை காவலர், வேண்டுமென்று தன்னை மரியாதை குறைவாக,சட்டத்துக்கு புறம்பாக அவமரியாதை செய்யப்பட்டதாக மது போதையில் இருந்த நபர் நினைத்திருந்தால் அவர் அருகிலுள்ள காவல் துறையில் புகார் கொடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து தமிழக மக்களை காக்கும் கடமையுள்ள காவல் ஊழியரை தரங்கெட்ட முறையில் விமர்சிக்க கூடாது. தமிழக காவல் துறையின் கண்ணியமும் தியாகங்களும் பெருமையும் காக்கப்பட வேண்டும்.

காவலர்கள் மக்களின் தோழர்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படும் வகையில், தமிழக காவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி மாவட்டம் தோறும் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையில் நிர்வாக சீர்கேடுகள் களையப்பட்டு மக்கள் எளிய முறையில் காவல்துறையிடம் இணைந்து தங்களுடைய பிரச்சினைகளை தீர்வு காணும் வகையில் காவல்துறையின் நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும்.

சமீப காலமாக காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட உள்ளூர் தலைவர்களுக்கும் சுமுகமான உறவு இல்லை. மக்களுடனும், காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் காவல்துறையினர் சட்டத்துக்குட்பட்ட சமூக நலன் சார்ந்த எண்ணத்துடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும் பொழுது அந்தந்த காவல் நிலைய எல்லையில் நிச்சயம் சட்டம் ஒழுங்கு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சமூகவிரோதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், ரவுடிகள் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதிகளின் நடமாட்டம் சட்டவிரோத செயல்பாடுகள் காவல்துறையினர் எளிதில் அறிந்து கொண்டு தங்கள் கடமையை செய்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் தற்போது காவல் நிலையங்களில் பொதுமக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நீண்ட நாள் போராட்டத்துக்கு பின்பு தான் சிஎஸ்ஆர் என்று சொல்லக்கூடிய புகார் ரசீது அளிக்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை மாநகர காவல் துறை முழுமையாக விஞ்ஞான முறைப்படி மக்களை இணைக்கும் சாஃப்ட்வேர்களை உருவாக்கி செயல்படும் போது மட்டும் தான் காவல்துறையும் எளிதாக மக்கள் பிரச்சினைகளை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பதற்கான சூழ்நிலை அமையும். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் அன்றாடம் வேலைக்கு செல்கின்ற ஏழை, நடுத்தர மக்கள் சில நேரங்களில் பலமுறை வரவழைத்து அலை கழிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் கட்டாயம் மக்கள் நல வரவேற்பாளர், இருக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் புகார் கொடுத்து தீர்வுக்காக காத்திருக்கும் மக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்களை தொடர்பு கொண்டு தங்களுடைய வழக்கு குறித்து தகவல்களை முன்னேற்றத்தை, சம்பந்தப்பட்ட காவல்துறையின் மக்கள் நல வரவேற்பாளர் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது மக்களுடைய நேரம் மிச்சமாகும். சரியான முறையில், சரியான நேரத்தில் விசாரணைக்கு வந்து தங்களுடைய புகார் இருக்கு தீர்வு காண முடியும்.

காவல் நிலையத்தில் அளிக்கப்படும் ஒவ்வொரு புகார் குறித்தும் History Sheet பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் புகார் எந்த நேரத்தில் என்று விசாரணை செய்யப்பட்டது யார் யார் விசாரிக்கப்பட்டார்கள் என்பதை காவல் நிலைய அதிகாரிகள் மாறினாலும், நாட்கள் கடந்தாலும் விசாரணை முறை பாதிக்கப்படாமல் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

முக்கியமாக காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறல்களை, காவல்துறையின் தவறுகளை தட்டிக் கேட்கக் கூடிய தனி நபர்கள் வழக்கறிஞர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவிக்கும் பொழுது அதை வன்மத்துடன் வீடியோ, எடுக்கப்படுவது கைவிடப்பட வேண்டும்.

காவல்துறையினர் அவசியம் இல்லாமல் அத்துமீறி வீடியோ எடுக்கும்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மோதல் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறையினர் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அத்துமீறல்களை, பாதிப்புகளை தான் வீடியோ எடுக்க வேண்டும்.

காவல் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் அதிகாரியின் வழிகாட்டுதலில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் வீடியோ எடுக்கலாம். உயர் அதிகாரிகள் அறிவுரை இன்றி காவல் துறையினர் பொதுமக்களுடன் தனிப்பட்ட மோதல் போக்கில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது சரியான நடைமுறை அல்ல என்பதை கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தி காவல்துறை பொதுமக்களின் தோழராக செயல்பட்டு பொதுமக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்