நியாயவிலைக் கடை பணியாளர்களை போட்டித் தேர்வின் மூலம் நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: “தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்களை நேரடி நியமனம் இல்லாமல் போட்டித் தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நியாயவிலைக் கடைகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்ய உத்தேசித்துள்ள பணியாளர்களை நேரடி நியமனமாக இல்லாமல் போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் மாவட்ட வாரியாக விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்கள் ஓராண்டுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையிலும் அதன் பின்னர் பணி வரன்முறைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. ஆகவே போட்டித் தேர்வின் அடிப்படையில் இவர்களை நியமிக்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாளர் பணி நியமனத்தில் நேர்மையாக இருந்த கூட்டுறவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கதிரேசன் ஓய்வுபெற உள்ளார். ஏற்கெனவே சென்னை, காமராசர், பாரதியார், அண்ணா, கல்வியல் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது. சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

தக்காளி, வெங்காயத்தின் விளைச்சலும் வெளி மாநில வரத்தும் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.120-க்கும், வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பண்ணை பசுமை அங்காடிகளில் குறைவான இடங்களில் மட்டுமே குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதை இன்னும் பரவலாக்கி நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி, வெங்காயத்தை குறைந்த விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மின்வாரியத்தில் ஆள் குறைப்பு செய்ய உத்தேசித்துள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும். ரூ.4000 ரூபாய்க்கும் அதிகமான மின் கட்டணத்தை ஆன் லைனில் மட்டுமே செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 95 விழுக்காடு பயனாளிகள் ஆன் லைனில் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, இந்த அறிவிப்பைத் திரும்ப பெறவேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதற்காக, வரும் 15-ம் தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5,000 முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

சாம்சங் ஆலை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைப்பதை அரசும், சாம்சங் நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்வர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களைவிட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கீழ்முகம் கிராமத்தில் புனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய திமுகவும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்குக் காரணம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. தீட்சிதர்கள் கோயில்களில் கிரிக்கெட் விளையாட அரசு தனி மைதானத்தை அமைத்து கொடுக்கலாம்.” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்