புதுச்சேரி உள்கட்டமைப்புக்கு ரூ.5,828 கோடி தேவை: மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏர்போர்ட் விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட, மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5,828 கோடி தேவை என்று மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்துள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், கூடுதல் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் அரசு முறை பயணமாக புதுவைக்கு வந்துள்ளனர். நோணாங்குப்பத்தில் உள்ள கடற்கரை விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை தலைமை செயலகத்தில் புதுவையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சரத்சவுகான், அரசுச் செயலர்கள் ராஜூ, மோரே, கேசவன், ஜெயந்த்குமார்ரே, ஜவகர், பல்வாடே, சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், ஆட்சியர் குலோத்துங்கன், டிஜிபி-யான ஷாலினிசிங், ஐஜி-யான அஜய்குமார்சிங்ளா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரசுச் செயலர் முத்தம்மா, புதுவையில் அரசு செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து எஸ்எஸ்பி-யான பிரவீன்குமார் திரிபாதி, புதுவையில் அமல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் பல்வேறு விளக்கங்களை கேட்டார். மத்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். கூட்டம் முடிந்ததும் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், கூடுதல் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் புதுவை சட்டப்பேரவைக்கு வந்தனர். அங்கு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது முதல்வர் ரங்கசாமி மத்திய உள்துறை செயலரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘மத்திய அரசு நிதி உதவியை மேம்படுத்துவதுடன் ஆண்டுக்கு பத்து சதவீதம் அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் சிறப்பு உதவி முக்கிய பதவிகளை நிரப்புதல், நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கு தேவை. குறிப்பாக, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5,828 கோடி தேவை ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு ரூ.3,925 கோடியும் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட ரூ.420 கோடியும், சுகாதாரத் துறை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடியும், மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.500 கோடியும், தேசிய சட்டப்பல்கலைக்கழகம் அமைக்க ரூ.483 கோடியும் தேவைப்படுகிறது.

அதேபோல் பயனாளிகள் வங்கிக் கணக்கில் உணவு பொருட்களுக்கான பணத்தை வரவுவைப்பதற்கு பதிலாக ரேஷனில் இலவச அரிசி தரும் கோப்புக்கு ஒப்புதல் தரவேண்டும். பணி சேர்க்கையில் இரண்டு வயது தளர்வு தரும் கோப்புக்கு ஒப்புதல் தரவேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்பு, உள்துறை செயலர் தலைமையிலான குழுவினர் ஆளுநர் மாளிகை சென்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனையும் சந்தித்துப் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE