மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு - செல்வப்பெருந்தகை வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நேற்று (செப்.22) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

பொதுக்குழு கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டிக்கிற வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன். கமல்ஹாசன் அவர்களது அரசியல் பயணம் வெற்றிபெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE