தமிழக பாஜகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் தமிழக பாஜகவில் இருக்க வேண்டும் எனவும், எனவே நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கட்சி பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என நம்புகிறேன். கடந்த சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் மிகக் கடுமையாக களத்தில் உழைத்து கொண்டிருக்கிறீர்கள். பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக, நம்முடைய குடும்பத்தை இன்னும் வேகப்படுத்துவதற்காக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கக்கூடிய கோரிக்கை, நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏனென்றால் நமது இலக்குமிகப்பெரிய இலக்கு. தமிழகத்தில்பாஜகவின் வளர்ச்சியை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் அன்பு பாஜகவின் பக்கம் வர தொடங்கியிருக்கிறது. நிறையபேர் நம்முடன் இணைய வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய இலக்கை மிகத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 200 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும். இது பெரிய இலக்காக இருந்தாலும், நிச்சயம் இது நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு தான்.

ஒரு நாளில் மண்டல அளவில் 500 பேர் பாஜகவில் இணைந்தால் மட்டும்தான் குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை எட்ட முடியும். தினமும் கட்சியில் இணையும் முதியவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இலவச செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வையுங்கள். அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது,அதில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு மிக முக்கியம். இந்திய அளவில் அதிகளவிலான உறுப்பினர்கள் தமிழக பாஜகவில் இருக்க வேண்டும். தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE