சென்னை: குறுகிய தூரத்தில் இயக்கப்படும் 10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1-ம்தேதி முதல் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், அரக்கோணம் - சேலம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை உட்பட 15-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் குறுகிய தூர பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 8 பெட்டிகளே இருக்கின்றன. மாவட்டங்களை இணைக்கும் இந்த ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சிறிய கதவுகள் இருப்பதால், பயணிகள் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - கடற்கரை, அரக்கோணம் - சேலம், சேலம் - அரக்கோணம், சேலம் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - சேலம், விழுப்புரம் - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் -விழுப்புரம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை, திருவண்ணாமலை - சென்னை கடற்கரை உட்பட 10 ரயில்களை அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்துஇயக்கப்பட உள்ளது. இவற்றில்போதிய அளவில் கழிப்பறை, பயணிகளுக்கான தகவல் பலகை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.