கல்லணை கால்வாயில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: கல்லணைக் கால்வாயில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள செவ்வப்ப நாயக்கன் ஏரிபகுதியைச் சேர்ந்தவர் பி.ராஜா(56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவுகாவல் சிறப்பு உதவி ஆய்வாளரான இவர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவர் வீட்டில்வளர்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக மகன் ராகுல், மகள்லாவண்யாவுடன், வண்ணாரப்பேட்டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க்கு நேற்று சென்றார். அங்கு ஆற்றில் நாயை ராகுல் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென நாய் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, அதைக்காப்பாற்றுவதற்கு ராகுல் முயன்றுள்ளார். அவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றதால் அதிர்ச்சியடைந்த ராஜா, மகனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் ராஜா நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கரையில் இருந்த பொதுமக்கள் கால்வாயில் இறங்கி ராகுலையும், நாயையும் காப்பாற்றினர். ராஜாவை தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் தேடி வந்த நிலையில், கண்டிதம்பட்டு பகுதியில் ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE