பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல், எழும்பூர் ரயில் சேவைகளில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்ட்ரல், எழும்பூரிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவையில் உடனடியாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு (12615) இயக்கப்படும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்புப் பணி காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை எழும்பூரில் இருந்து டெல்லிக்கு மாலை 5.40 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (12616) இயக்கப்படும் ஜிடி எக்ஸ்பிரஸ், அடுத்த அறிவிப்பு வரும் வரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.

எழும்பூர் - காரைக்கால் (16175) எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு காரைக்காலுக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக காரைக்கால்-எழும்பூர் (16176) எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

எழும்பூர்-மங்களூரு (16159) எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு மங்களூருக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக மங்களூரு-எழும்பூர் (16160) எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE