சென்னை | ரூ.50 லட்சம் கோயில் சொத்துகள் மீட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக, வியாசர்பாடி பாலகிருஷ்ணா தெருவில் 600 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த கோபி மற்றும் பரந்தாமன் என்பவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி அதனை வாடகைக்கு விட்டு வந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளர் உத்தரவுப்படி அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் திருவேங்கடம் மற்றும் பெரம்பூர் சரக ஆய்வாளர் யுவராஜ் முன்னிலையில், கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம் தலைமையில், கோயில் மேலாளர் எஸ்.தனசேகர், வழக்கறிஞர் விஜய் கணேஷ் உள்ளிட்டோர் கோயில் சொத்தை ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று மீட்டு, அந்த இடத்திற்கு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE