சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை:சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு அனுமதி மறுத்து தலைவர்களை கைது செய்துள்ள தமிழக அரசின் அணுகுமுறை ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும். அரசமைப்புச் சட்டத்தை மத்திய அரசிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமல்ல, கொரியன் முதலாளிகளிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம், சட்டத்துக்கு புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என்று ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் சேர்ந்து சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்தநிலையில் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிஐடியு மட்டுமின்றி, ஏஐடியுசி, ஏ.ஐ.யு.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். எல்.டி.யு.சி உட்பட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (செப்.18) ஆதரவு ஆர்ப்பாட்டத்துக்கு வள்ளுவர் கோட்டம் அருகே அனுமதி கோரியிருந்தனர். இன்று காலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடு வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் காவல்துறையினரை குவித்து போராட்டத்துக்கு வந்தவர்களை போராட்டம் நடக்கும் இடத்துக்கு அனுமதிக்காமல் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். போராட்டத்துக்குச் சென்ற சிஐடியு மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகுமார் உள்ளிட்ட தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் கைது செய்துள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வதாகும். அரசமைப்புச் சட்டம் சங்கம் சேரும் உரிமையை வழங்கியுள்ளது. அதை மறுப்பதும், அதற்காக அமைதியாக போராடுபவர்களை கைது செய்வதும் போராட்டங்களை சீர்குலைப்பதும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயல்களாகும். அரசமைப்புச் சட்டத்தை மத்திய அரசிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமல்ல, கொரியன் முதலாளிகளிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. இந்த பின்னணியில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து, தொழிற்சங்க தலைவர்களை கைது செய்துள்ள தமிழக அரசின் அணுகுமுறை ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும்.

முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென்கிற தமிழக அரசின் விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொள்கிறது. மூலதன வருகை என்பதே மாநிலத்தின் நலன், தொழிலாளர் நலன் என்பதிலிருந்து தான். அவற்றை மறுத்துவிட்டு மூதலீடுகள் வருவது என்பது நோக்கத்தை நிறைவு செய்யாது. இந்த பகுதியில் சிஐடியு தலைமை தாங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. அங்கெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. முதலீடுகள் வருவதற்கு சங்கம் வைப்பது தடையாகவும் இல்லை.

எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சட்டப்படியான தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும், சட்டப்படியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் முறையில் காவல்துறை நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு காண அரசு தலையிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE