தமிழக மீனவர்கள் 45 பேருக்கு ரூ. 2.76 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப் படகு மீனவர்கள், 10 விசைப் படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.2.76 கோடி அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 08 அன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 35 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ. 35 லட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து அந்தோனி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடலுக்குச் சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த 10 விசைப்படகு மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ. 35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக, 45 தமிழக மீனவர்களுக்கு இலங்கை ரூ.10 கோடி (இந்திய மதிப்பில் ரூ 2.76 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் கொழும்பில் உள்ள மெரியான முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 விசைப் படகு மீனவர்கள் புத்தளம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE