புதுச்சேரி: இண்டியா கூட்டணி பந்த் எதிரொலி; எல்லைகளில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி நடத்தும் பந்த் போராட்டத்தின் காரணமாக கோரிமேடு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப் படுகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர்.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று (செப்.18) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி எல்லையான கோரிமேடு, கனக செட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகியவற்றில் நிறுத்தப்படுகின்றன.

வெளியூர் செல்லும் பயணிகள் புதுச்சேரி அரசின் பேருந்து மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுகிறார்கள். அங்கு காத்திருக்கும் தமிழக பேருந்துகள் மூலம் பயணிகள் சென்னை, திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற தமிழக பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

இதனால், எல்லைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகள் காத்திருக்கின்றன. பெரும் அளவிலான பயணிகள் வரவில்லை என்றாலும் அவர்களுக்காக காத்திருந்து தமிழகப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE