புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்: மக்கள் கடும் அவதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த் போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. பந்த் காரணமாக தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் வராததால் பயணிகள் அவதியடைந்தனர். அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு மீது எழுந்தது.

இதையடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும் முழுமையாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் மின் கட்டணத்தில் மறைமுகமாக கூடுதல் கட்டணமும் புதுச்சேரியில் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இண்டியா கூட்டணி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால் என நான்கு பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடக்கிறது.

இதன் காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோ ,டெம்போக்கள் இயங்கவில்லை. திரையரங்களின் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை மாலை ஆறு மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகள் இயங்காது என புதுச்சேரி முதல்வர் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை இயங்குகின்றன. ஆனால் குறைந்த அளவே மாணவர்கள் வந்துள்ளனர்.

கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டதால் வாகனங்கள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுகாதாரம் கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளன. தனியார் பஸ்கள் ஏதுமில்லை. அவற்றை போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பயணிகள் அவதி: புதுச்சேரி பேருந்து நிலையத்திற்குள் தமிழக அரசின் பேருந்துகள் ஏதும் வரவில்லை .இதனால் சென்னை, கடலூர் விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர். புதுச்சேரி அரசின் பேருந்துகளில் ஏராளமான பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் புதுச்சேரி எல்லையான கோரிமேடு, கனக செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் இறக்கப்படுகிறார்கள். அங்கு காத்திருக்கும் தமிழக அரசின் பேருந்துகள் மூலம் அவர்கள் வெளியூர் செல்கிறார்கள். பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வணிகநிறுவனங்கள் மூடல்: போராட்டத்தின் காரணமாக நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.

இதேபோன்று மீன் மார்க்கெட் திறக்கப்படவில்லை.அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீஸார் மாநில முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE