வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் ஆளுநர் மரியாதை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வருகைபுரிந்தார்.

தொடர்ந்து, வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரகநினைவு ஸ்தூபியில் மலர்கள் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர், அங்குள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட காட்சி விளக்க மையத்தைப் பார்வையிட்டார். பின்னர், வேளாங்கண்ணிக்கு சென்று தங்கினார்.

இன்று (செப்.18) நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். முன்னதாக, நாகை வந்த தமிழக ஆளுநரை, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

இதற்கிடையே, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அகஸ்தியம்பள்ளி நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலையில் கருப்புக் கொடியுடன் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆளுநர் வருகைக்கு முன்பாக அவர்களை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE