ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உயிரிழந்தனர். ஆரணி அடுத்த அடையபுலம் கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த குப்பன்-அஞ்சலி தம்பதியின் மகன் மோகன்(12), மகள் வர்ஷா (8), விநாயகம்-செல்வி தம்பதியின் மகள்கள் கார்த்திகா(10), தன்ஷிகா (5) ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள ஓடைதாங்கல் ஏரியில் குளித்துள்ளனர்.
அவர்கள் நீண்ட நேரமாகியும் ஏரியில் இருந்து வெளியே வரவில்லை. ஏரிக்கரையில் இருந்த அவர்களது துணிகளைப் பார்த்த கிராம மக்கள், உடனடியாக ஏரியில் இறங்கி 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை கிராம மக்கள் மீட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமியப் போலீஸார் அவர்களது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.