ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உயிரிழந்தனர். ஆரணி அடுத்த அடையபுலம் கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த குப்பன்-அஞ்சலி தம்பதியின் மகன் மோகன்(12), மகள் வர்ஷா (8), விநாயகம்-செல்வி தம்பதியின் மகள்கள் கார்த்திகா(10), தன்ஷிகா (5) ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள ஓடைதாங்கல் ஏரியில் குளித்துள்ளனர்.

அவர்கள் நீண்ட நேரமாகியும் ஏரியில் இருந்து வெளியே வரவில்லை. ஏரிக்கரையில் இருந்த அவர்களது துணிகளைப் பார்த்த கிராம மக்கள், உடனடியாக ஏரியில் இறங்கி 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை கிராம மக்கள் மீட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமியப் போலீஸார் அவர்களது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE