800 கிலோ சிறுதானியங்களை பயன்படுத்தி பிரதமர் மோடியின் உருவம்: சென்னை மாணவி உலக சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை அடுத்த போரூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பிரதாப் செல்வம் - சங்கீராணி தம்பதியரின் மகள் பிரெஸ்லி ஷேக்கினா(13). அங்குள்ள வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் பிரெஸ்லி. ஓவியத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம். பிரதமர் மோடி மீது அவருக்கு கொள்ளை பிரியம் என்பதால் அவரது 74-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறுதானியங்களைக் கொண்டு அவரது படத்தை பிரம்மாண்டமாக வரைந்து உலக சாதனை படைக்க விரும்பினார்.

இதற்காக தொடர்ந்து பல நாட்கள் பயிற்சி பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் 600 சதுரஅடி பரப்பில் 800 கிலோ சிறுதானியங்களைக் கொண்டுபிரதமர் மோடியின் உருவத்தை பிரம்மாண்டமாக வரைந்தார். காலை 8.30 மணிக்கு வரையத் தொடங்கிய அவர், இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாமல் வரைந்த மாணவி பிரெஸ்லியின் இந்த மாபெரும் முயற்சியையூனிகோ உலக சாதனை நிறுவனம் மாணவர் சாதனைபிரிவின்கீழ் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சிவராமன் மாணவிபிரெஸ்லிக்கு உலக சாதனை படைத்ததற்காக சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார். மேலும்,பள்ளி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் பிரெஸ்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவி பிரெஸ்லிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE