கும்பகோணம் | பணப்பலன்களை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு சங்கத்தினர் இன்று சாலை மறியல் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பையன், மண்டலச் செயலாளர்கள் ஆர்.மனோகரன், வி.செல்வராஜ், எஸ்.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், 2022 நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பையும், கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும், பென்ஷன் திட்டத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், போக்குவரத்து ஊழியர்களை வஞ்சிப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE