குன்னூரில் தாயைப் பிரிந்த காட்டுமாட்டுக் கன்று; 3 நாட்களாக சாலையில் திரியும் பரிதாபம்

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: குன்னூரில் தாயை பிரிந்த காட்டுமாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கடந்த மூன்று நாட்களாக திக்குத் தெரியாமல் சாலையில் சுற்றி வருகிறது. இதனால் இந்தக் கன்றுக்குட்டி வாகனத்தில் அடிபடும் சூழ்நிலை உள்ளதால் வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களில் உலா வந்த காட்டு மாடு கூட்டம் தற்போது குடியிருப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தேடி வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில், குன்னூர் ராணுவ முகாம் பகுதியில் சில நாட்களே ஆன காட்டுமாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று தாயைப் பிரிந்து மூன்று நாட்களாக சாலையில் திக்குத் தெரியாமல் சுற்றி வருகிறது. அந்தப் பகுதிகளில் உள்ள நாய்கள் கன்றுக்குட்டியை விரட்டுவதும் அவற்றுக்குப் பயந்து கன்றுக்குட்டி ஓடுவதுமாக உள்ளது. நாய்களுக்குப் பயந்து ஓடும்போது அந்தக் கன்றுக்குட்டி வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ,எனவே வனத்துறையினர் இந்தக் கன்றுக்குட்டியை மீட்டு தாயிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னூர் வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE