தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழத்தில் இன்று 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 15) முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் செப். 15-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 3 செ.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சோலையாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய இடங்களில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும்அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE