சென்னை நுங்கம்பாக்கம் அண்ணாவின் வீட்டை அரசுடமையாக்கி நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்: திருப்பூர் துரைசாமி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: சென்னை நுங்கம்பாக்கம் அண்ணாவின் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என திராவிட இயக்க மூத்த தலைவர் திருப்பூர்சு.துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று (செப். 15) கொண்டாடப்பட்டது. அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் வீட்டை அரசு நினைவு இல்லமாக்க வேண்டும் என, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த ஆண்டும் முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக சு.துரைசாமி கூறியதாவது: தமிழ்நாட்டு அரசியலில் 1967-ம்ஆண்டு பொதுத்தேர்தலில் சிறந்த கூட்டணியை உருவாக்கி, காங்கிரஸ் இல்லாத ஆட்சியை அமைத்த பெருமை அண்ணாவையே சேரும்.அந்த வெற்றி வேரூன்றி இன்றுவரை தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ளதை அனைவரும் அறிவர். பேரறிஞர் அண்ணா சில காலமே தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பு வகித்தாலும், மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். சுயமரியாதை சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கினார். இருமொழிக்கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார்.

1967-ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணா தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மே மாதம் 1-ம் தேதியை, தொழிலாளர் தினஅரசு விடுமுறை நாளாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மே நாள் விழாவை, அரசு விழாவாக கோவை வ.உ.சி பூங்காவில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்துநடத்தினார். அதேபோல் கோவையில் மூடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தையும் காப்பாற்றினார். அண்ணா எண்ணற்ற சமூக மேம்பாட்டு திட்டங்களை, பாமர மக்கள் பயனளிக்கும் வகையில் குறுகிய காலத்திலேயே செயல்படுத்தி வெற்றி கண்டார்.

1969-ம் ஆண்டு பிப். 3-ம் தேதி அண்ணா மறைந்த பிறகு, அவரது பூத உடல் கொண்டுவந்து முதலில் வைக்கப்பட்ட இடம் அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் இல்லம் தான். இன்றைய தலைமுறைக்கு இது தெரியவாய்ப்பில்லை. அதன்பின்னர் தான் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கோடிக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது உடல்கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வந்து செல்லும் வெளி மாவட்ட மக்களும், வெளிநாட்டவரும் அறிந்துகொள்ளும் வகையில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு வந்து பார்த்துச் செல்லக்கூடிய காரியத்தை ஆட்சியாளர்கள் செய்யாமல் இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இந்திய நாட்டில் பல தலைவர்கள் அவர்கள் சிறிது காலம் தங்கிய வீடுகள் எல்லாம் அரசுடமை ஆக்கப்பட்டு, நினைவு இல்லங்களாக தற்போது பாதுகாத்து வருவதை பார்க்கிறோம்.

ஒரு முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், கோடான கோடி தமிழ்நாட்டு மக்களால் அண்ணா இன்றளவும் நினைவில் வைத்து போற்றப்படுகிறார். இன்றைக்கு திமுகவில் உள்ள பல தலைவர்கள், அண்ணாவின் மறைவுக்கு பிறகு கட்சிக்கு வந்தவர்கள். எனவே, திராவிடமாடல் அரசுஅண்ணா கடைசியாக சுமார் 15 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த, அவரதுநுங்கம்பாக்கம் வீட்டை அரசுடமையாக்கி, நினைவு இல்லமாக அறிவிக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE