தென்காசி: விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்; விவசாயிகள் வேதனை

By த.அசோக் குமார்

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்து நெல், மா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும், விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவது தொடர் நிகழ்வாக உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் யானைகள் வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வடகரை அருகே ஒச்சாநடை பகுதியில் கடந்த 2 நாட்களாக 3 யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. அவற்றில் ஒரு யானை வேறு எங்கோ சென்றுவிட்ட நிலையில், இன்று காலையில் 2 யானைகள் வடகரை- மேட்டுக்கால் சாலையில் சுற்றித் திரிந்தன. இதனால் அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் அச்சமடைந்தனர்.

பின்னர், விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள நெல்விளாகம் குளத்தில் இறங்கிய 2 யானைகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. சிறிது நேரம் நீந்தி குளித்த யானைகள் பின்னர், கரையேறி விவசாய நிலங்களுக்குள் சென்றன.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 13 யானைகள் வெவ்வேறு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக சுற்றித் திரிகின்றன.

வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன. பகல் நேரத்தில் எங்காவது ஓய்வெடுக்கும் அவை இரவு நேரத்தில் மீண்டும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லவே அச்சமாக உள்ளது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE